எப்போதும் போல சுயபுராணத்துடன் ஆரம்பிக்கின்றேன். என்னிடம் எனக்கு தெரிந்த ஒரு நல்ல குணம், அடுத்தவரைப் பார்த்து பொறாமை படும் குணம் இல்லை, அவரிடம் உள்ளது நம்மிடம் இல்லையே என்று யோசித்ததில்லை, நமக்கு தேவையானது நம்மிடம் உள்ளது என்று திருப்தி படும் ஜாதி. ஆனால் இரண்டு விஷயங்களை கண்டால் மட்டும் ஒரு பொறாமை, அல்லது ஒரு வயித்தெரிச்சல் என்று கூட சொல்லலாம்.
ஒன்று காடு மலை என்று சுற்றித்திரிபவர்களையும், இசையை அதன் நுணுக்கத்துடன் அனுபவித்து ரசிப்பவர்களையும் கண்டால், என்னால் அது முடியவில்லை என்று கண்டிப்பாக ஒரு பொறாமை ஏற்படும். டபுள் வயித்தெரிச்சல் இப்புத்தகத்தை படித்து.
என் சொந்த ஊர் ஒரு காய்ந்த பகுதி, மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் என்றாலும், அது ஒரு மழை மறைவு பிரதேசம். எங்களூரிலிருந்து ஆறு கி.மீ சென்றால் முல்லையாறு, ஒரு முறைகூட அதில் குளிக்கும் பாக்கியம் கிடைத்தில்லை. ஊரிலிருந்த பத்தொன்பது வருடங்களும், வீடு, பள்ளி, புத்தகங்கள் (பாட புத்தகங்கள் அல்ல) என்றே இருந்துவிட்டேன். ஊரிலிருந்த மலையில் கூட ஏறியதில்லை. ஆனால் அனைத்தையும் செய்ய ஆசை உண்டு. அந்த ஆசை இப்புத்தகம் மூலம் நிறைவேறியது.
பயணங்களைப் பற்றி படித்தது என்றால் வெகு குறைவு. எஸ். ரா விகடனில் எழுதியது, அது எனக்கு போரடிக்க ஆரம்பித்து. ஒரு கிராமத்தில் ஆட்டு மந்தை கடந்து செல்வதை சிலாகித்து பத்து பக்கம் எழுதினால் எப்படி படிப்பது. அதன் பின் ஜெ.மோ எழுதும் பயணக்கட்டுரைகள், படிக்கும் போதும், படங்களை பார்க்கும் போதும் நேரில் சென்று பார்க்க வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். இப்போது கூட அவரது குகைப்பயணத்தை படித்து காதில் புகைவருகின்றது. என்ன செய்ய?