22 ஜனவரி 2013

நடந்தாய் வாழி காவேரி - தி. ஜா, சிட்டி

எப்போதும் போல சுயபுராணத்துடன் ஆரம்பிக்கின்றேன். என்னிடம் எனக்கு தெரிந்த ஒரு நல்ல குணம், அடுத்தவரைப் பார்த்து பொறாமை படும் குணம் இல்லை, அவரிடம் உள்ளது நம்மிடம் இல்லையே என்று யோசித்ததில்லை, நமக்கு தேவையானது நம்மிடம் உள்ளது என்று திருப்தி படும் ஜாதி. ஆனால் இரண்டு விஷயங்களை கண்டால் மட்டும் ஒரு பொறாமை, அல்லது ஒரு வயித்தெரிச்சல் என்று கூட சொல்லலாம்.

ஒன்று காடு மலை என்று சுற்றித்திரிபவர்களையும், இசையை அதன் நுணுக்கத்துடன் அனுபவித்து ரசிப்பவர்களையும் கண்டால், என்னால் அது முடியவில்லை என்று  கண்டிப்பாக ஒரு பொறாமை ஏற்படும். டபுள் வயித்தெரிச்சல் இப்புத்தகத்தை படித்து. 

என் சொந்த ஊர் ஒரு காய்ந்த பகுதி, மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் என்றாலும், அது ஒரு மழை மறைவு பிரதேசம். எங்களூரிலிருந்து ஆறு கி.மீ சென்றால் முல்லையாறு, ஒரு முறைகூட அதில் குளிக்கும் பாக்கியம் கிடைத்தில்லை. ஊரிலிருந்த பத்தொன்பது வருடங்களும், வீடு, பள்ளி, புத்தகங்கள் (பாட புத்தகங்கள் அல்ல) என்றே இருந்துவிட்டேன். ஊரிலிருந்த மலையில் கூட ஏறியதில்லை. ஆனால் அனைத்தையும் செய்ய ஆசை உண்டு. அந்த ஆசை இப்புத்தகம் மூலம் நிறைவேறியது.

பயணங்களைப் பற்றி படித்தது என்றால் வெகு குறைவு. எஸ். ரா விகடனில் எழுதியது, அது எனக்கு போரடிக்க ஆரம்பித்து. ஒரு கிராமத்தில் ஆட்டு மந்தை கடந்து செல்வதை சிலாகித்து பத்து பக்கம் எழுதினால் எப்படி படிப்பது. அதன் பின் ஜெ.மோ எழுதும் பயணக்கட்டுரைகள், படிக்கும் போதும், படங்களை பார்க்கும் போதும் நேரில் சென்று பார்க்க வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். இப்போது கூட அவரது குகைப்பயணத்தை படித்து காதில் புகைவருகின்றது. என்ன செய்ய? 

19 ஜனவரி 2013

பயாஸ்கோப் - அசோகமித்திரன்

அசோகமித்திரனின் கட்டுரை தொகுப்பு. சினிமா பற்றிய கட்டுரைகள் மட்டும். அசோகமித்திரன் சினிமா துறையுடன் நெருங்கிய தொடர்புடன் இருந்து வந்திருக்கின்றார். அந்த அனுபவங்கள் ஏற்கனவே நாவல்களாக மாறி இருக்கின்றது. அதைத் தவிர சினிமா பற்றி எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு. 

இந்திய சினிமா, உலக சினிமா (இந்தியா வேறு உலகம் என்பது பலரின் எண்ணம் போல, பெரும்பன்மையோர் வழியே நம் வழி) பற்றி விபரமாக எழுதியுள்ளார். 

கட்டுரைகளை சினிமா புள்ளிகளை பற்றியவை, குறிப்பிட்ட சினிமாக்களை பற்றியவை, ஜெமினி ஸ்டூடியோவின் வரலாறு (கிழக்கில் இருந்து ஏன் இன்னும் ஜெமினி ஸ்டூடியோ - கனவின் கதை வரவில்லை?)  என பல வகையாக பிரிக்கலாம். பல சுவாரஸ்யமான தகவல்களை அவருக்கே உரித்தான சுருக் நறுக் நடையில் எழுதியுள்ளார். சில தகவலகள் மிகப் பழையவை, அது தேவையா, அது ஏன் இப்போது என்று கூட எண்ணலாம், அதற்கு பதில் அவரே தருகின்றார். "மனித நினைவு, மனித தேர்விற்கும் கட்டுபாட்டிற்கும் உட்பட்டதா என்பது சந்தேகத்திற்கு உரியது"

18 ஜனவரி 2013

சங்கர்லால் துப்பறிகின்றார் - தமிழ்வாணன்

பொங்கல் விஜயத்தின் போது ஊரில் படித்தது. அப்புத்தகம் எப்படி என் வீட்டில் வந்தது என்று இன்னும் தெரியவில்லை. எப்போதோ எங்கோ ஓசி வாங்கி வைத்திருந்திருக்கின்றேன். குப்பையை குடைந்த போது கிடைத்தது. பொங்கல் தின்ற மயக்கத்தில் அரைத் தூக்கத்தில் படிக்க ஆரம்பித்தேன். நடுநடுவே தூக்கம் கலைக்க அலுவலகத் தொல்லைகள். மீண்டும் தூக்கத்தை விரட்டிப் பிடிக்க உதவி செய்த புத்தகத்தை பற்றி எழுதாவிட்டால் தூக்கம் வருமா?

தமிழ்வாணனின் சங்கர்லால் கதாபாத்திரம் அக்காலத்தில் மிகவும் பிரபலம் என்று கேள்விபட்டிருக்கின்றேன். அவரும் பிரபலம்தான், தொப்பியும் கண்ணாடியும் மட்டுமே விலாசத்தில் போட்டால் போதும், கடிதங்கள் அவருக்கு போய்சேர்ந்துவிடும் என்பதாக சரித்திரம் சொல்கின்றது. 

பல கதைகள் மூலம் பிரபலமானவர். இக்கதை மிக முக்கியமானது, சங்கர்லாலுக்கு திருமண ப்ராப்தம் இக்கதையில் தான் கிடைத்துள்ளது. 

கதை எல்லாம் அக்கால கதை, ஒரு பணக்காரர் கொலை செய்யப்படுகின்றார். கையில் கத்தியுடன் அவரது பெண் பிடிபடுகின்றார். அவளைப் பார்த்து கண்ணீர் விடும் போலிஸ்காரர் வகாப், சங்கர்லாலை துப்பறிய அழைக்கின்றார். அவர் ஸ்டெயிலாக மாது குடுத்த தேநீரை குடித்துக் கொண்டே மர்மங்களை அவிழ்த்து, கத்தியுடன் பிடிபட்ட பெண்ணை திருமணம் செய்து கொள்கின்றார்.

சங்கர்லால் ஒரு வானத்தில் பறக்கவில்லை அவ்வளவுதான், மற்றபடி அவர் ஒரு மேதாவி. ஹோட்டல் பையன் கூட அவருக்கு திருமணம் ஆகவில்லையே என்று விசனப்படும் அளவிற்கு பிரபலம். சிகரெட் பெட்டியில் கேமெரா, பெண்வேடம், கான்ஸ்டபிள் வேடம் என பல வழிகளில் புகுந்து குற்றவாளியை கண்டு பிடிக்கின்றார்.

தூக்கம் வர வேண்டுமா, கண்டிப்பாக படியுங்கள் என்று சிபாரிசு செய்கின்றேன்.  கண் மேல் பலன் கிடைத்தது எனக்கு. தலைப்பு கூட சரியா என்று சந்தேகம் வருமளவிற்கு படித்துள்ளேன். 

16 ஜனவரி 2013

தி. ஜானகிராமன் சிறுகதைகள் - 9

முந்தைய பகுதிகள்




      செல்லுர் சொர்ணாம்பாவின் அழகு அக்கரைச் சீமை வரை பிரபலம். சிங்கப்பூரில் இருக்கும் கோவிந்த வன்னி அங்கு வரக்காரணமே அச்சொர்ணாம்பா. அவளின் ஒரு நாள் பணத்தை சம்பாதிக்க சிங்கப்பூர் வந்த கோவிந்த அதை சம்பாதித்து முடிக்க பத்து வருடங்கள் ஆகிவிட்டன. "ஒரு நாளுக்காக பத்து வருட உழைப்பா? அந்த ஒரு நாளுக்கு பின் மீண்டும் அதே உழைப்பிற்கு திரும்ப வேண்டுமே" என்று கூறும் நண்பரிடம் "அப்புறம் உயிர் வாழணும்தான் என்ன முடை? உசிரே இல்லாம இருந்திட்டா?" என்னுமளவிற்கு அவளின் நினைவு. திரும்பி வந்து பார்க்கும் போது, அவளுக்கு அறுபது வயது. அவனது தவத்தின் தரிசனம் விபரீதமாகிவிட்டது


       போன பதிவில் கூறியது போல பாயசம் அவரது மாஸ்டர் பீஸ் எனறால் இது அதை விட ஒரு படி மேலே என்றுதான் எனக்கு படுகின்றது. மிக அருமையான கதை. இரண்டு சம்பவங்களை இணைத்து ஒரே மூச்சில் எழுதியதாக கூறுகின்றார் தி.ஜா. ஒரு குட்டிப் பெண், கண்காணாத சீமைக்கு ஒரு பாவடைச் சட்டையுடன் வேலைக்கு போகின்றாள். அக்குழந்தையின் பொறுப்புணர்வும், தைரியமும், சமர்த்தும் அனைவரையும் கவர்கின்றது, கரைக்கின்றது. குமாஸ்தாவின் குட்டிப் பையனை அவன் தனக்கென்று வாங்கிய பழத்தை அப்பெண்ணிடம் தர வைக்கின்றது. கதை எழுதிய விதமும், குழந்தைகளின் உலகத்தை அவர் படம்பிடித்துள்ளதும், என்ன சொல்ல. படித்து முடித்தபின் அக்குழந்தை என்னவாகும், எங்கோ நன்றாக இருக்கும், இருக்கட்டும் என்று நம்மையறியாமல் வேண்ட வைக்கின்றது. எங்காவது சிறு குழந்தைகள் வேலை செய்வதைக் கண்டால் இக்கதை நினைவிற்கு வராமல் போகாது.

11 ஜனவரி 2013

தெய்வீக உணவு

அம்மா எப்போது ஊருக்கு போனாலும் எங்கள் ஊர் முருகன் கோவிலில் உள்ள பிள்ளையாருக்கு ஒரு நப்பாசை துளிர் விடும். ஒரு விடல் தேங்காய் கிடைக்கும் என்று அவர் ஆசைப்பட்டுக் கொண்டிருப்பார். எப்படி நடக்கும்? வேண்டுதல் என் பாட்டியுடையது என்றாலும்,  அது நிறைவேறுவது என் கையில் அல்லவா இருந்தது. என் பாட்டி என்றால் எல்லாருக்கும் ஒரு டெரர்தான். அனைவருக்கும் ஒரு பயம். அவருக்கும் யாரும் லட்சியம் கிடையாது, தடால் புடால் தான். அவர் எங்கள் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு பார்த்ததில்லை, ஆனால் தலையில் பீரோ விழுந்து அடிப்பட்ட கட்டுடன் தலைக்கு குளித்துவிட்டு கோவிலுக்கு பொங்கல் பிரசாதம் போட போய்விடுவார். அப்படி பட்ட பாட்டி;

" அப்பா பிள்ளையாரப்பா, இந்த பையன் எதுவும் சொல்லாமல் சாப்பிட்டு போகடும் உனக்கு ஒரு விடல் போடுகின்றேன்" என்று வேண்டிக் கொள்வாள்.

பாவம் அது என்றும் நடந்ததில்லை.

இந்த சாப்பாட்டு ராம புத்தியால் பல பேர் சாபத்தை வாங்கிக் கொண்டுள்ளேன்,

அப்படி வக்கனையாக சாப்பிட்டுக் கொண்டிருந்த நான் பெங்களூரில் வந்து மாட்டிக் கொண்டேன். அனைவரின் சாபமும் வேறு வழியில் வேலையைக் காட்டத் துவங்கியது. இனிப்பு சாம்பாரும், புளித்த சட்னியும், தகடு தோசையுமாக என் வாழ்க்கை போனது. அதைக் கூட சகித்துக் கொண்ட எனக்கு, பொங்கல் என்ற பெயரில் தரப்படும் கஞ்சியையும் அதற்கு தொட்டுக் கொள்ள தரப்படும் தயிரும் தாங்க முடியவில்லை. அப்படியும் அதைக் குடித்துக் கொண்டு உயிருடன் வாழ்ந்தேன்.