29 அக்டோபர் 2016

தூர்வை - சோ. தர்மன்

தூர்வை

தூர்வை என்ற வார்த்தையே இப்புத்தகத்தின் மூலமே கேள்விப்படுகின்றேன். தூர் என்றால் வேர் என்ற அர்த்தமுண்டு என்பது தெரியும் ஏதோ வேர் சம்பத்தப்பட்ட வார்த்தை என்று யூகித்தேன். சரிதான். அருகம்புல்லுக்கு அந்த பெயர். அருகம்புல்லின்  வேர் ஆழமானதாகவும், படர்ந்தும் இருக்கும். எளிதில் முழுவதும் அழிக்க முடியாது. மறுபடியும் துளிர்க்கும். 

ஒரு காலகட்டத்தை பற்றிய பதிவே இந்த தூர்வை. கோபல்ல கிராமம் நாவலுக்கும் இதற்கும் பல ஒற்றுமைகள் உண்டு. இரண்டும் கரிசல்காட்டு வாழ்க்கையை பேசுகின்றது, கிராமத்து வாழ்க்கை. ஒரு குடும்பத்தை வைத்துக் கொண்டு அவர்கள் கதை வழியாக ஊரின் கதையை சொல்வது. இரண்டிலும் உள்ள முக்கிய அம்சம், கதை. எழுதும் கதைகள் வேறு, சொல்லும் கதைகள் வேறு. சொல்லும் கதைகள் சுருக்கமானவை, அதில் ஒரு சுவாரஸ்யம், சொல்பவனின் கற்பனையும் கலந்தது இருக்கும். காதுகள் வழியே சென்று நமக்கு கற்பனானுபவத்தை தரும்.

தூர்வை அது போன்று கதைகளின் கலவை. மினுத்தான் - மாடத்தி குடும்பத்தை வைத்து ஒரு உருளக்குடி கிராமத்து கதையை சுவையாக கூறுகின்றார். எழுதவில்லை. கூறுகின்றார். நாம் எழுத்து வடிவில் கேட்கின்றோம். அத்தியாயம் என்று எதுவும் கிடையாது. எவ்வித பகுப்பும் இல்லை. எங்கு எப்பகுதி ஆரம்பித்து முடிகின்றது என்பதெல்லாம் கிடையாது. அவர் பாட்டிற்கு சொல்லிக் கொண்டே செல்கின்றார். கேட்ட, கண்ட அனைத்தையும் கொட்டிவிட வேண்டும் என்ற எண்ணமோ என்னவோ. ஆனால் எங்கும் சுவாரஸ்யம் குன்றவில்லை.

26 அக்டோபர் 2016

வலம் மாத இதழ்

வலம் இதழ் கைக்கு கிடைத்தது. முதலில் அனுப்பிய இதழ் பெயருக்கேற்றபடி வேறெங்கோ வலம் வந்து கொண்டிருக்கின்றது.  என் கைக்கு வரவில்லை. வலம் இதழுக்கு மின்னஞ்சல் அனுப்பிய பின் அவர்கள் உடனடியாக மற்றொரு இதழை அனுப்பினர். வெள்ளிக்கிழமை அனுப்பியது இன்று கையில் கிடைத்தது. முதல் இதழ் தவறியதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. 

அரவிந்தன் நீலகண்டன், ஜடாயு, ஹரன் பிரசன்னா ஆகிய மூவரும் ஆசிரியர்கள். கவிதையெல்லாம் இல்லையாம். அதை படித்த பின்னரே தைரியமாக பணம் கட்டினேன்.

ஒட்டப்பட்ட தபால் தலைகூட பத்திரிக்கையின் தலைப்பிற்கேற்றபடி இருந்தது. எம்.எஸ்.சுப்புலக்‌ஷ்மியும்,கணித மேதை ராமானுஞரும். அதுவாக அமைந்ததோ, திட்டமிட்டதோ. பாலிதீன் கவரில் முகவரியுடன் சேர்த்து அதையும் டேப் போட்டு ஒட்டியதில், பாவம் கஷ்டப்பட்டு அதில் பேனாவை வைத்து டிக் அடித்திருந்தனர். (முத்திரையெல்லாம் இப்போது கிடையாதா? இருந்தாலும் இதில் அடித்திருக்க முடியாது. எல்லாப்பக்கமும் பாலிதீன் கவர்.)

20 அக்டோபர் 2016

வெய்யோன் - ஜெயமோகன்

வெய்யோன் 

ஜெயமோகன் எழுதும் வெண்முரசின் ஒன்பதாவது நாவல். இதன் பிறகு இரண்டு நூல்கள் வெளிவந்துவிட்டது. 

வெண்முரசின் முக்கிய அம்சம் பாரதத்தை பல்வேறு கோணங்களில் பார்ப்பதே. விடுபட்ட கண்ணிகளை சேர்க்கும் ஒரு முயற்சி. சிறிய பாத்திரங்கள் பெரிதாக விஸ்வரூபம் எடுத்து நிற்கின்றார்கள். வெய்யோன், கர்ணனை இன்னும் சற்று அருகில் சென்று பார்க்கும் ஒரு முயற்சி.

வெய்யோன், கர்ணனை நாயகனாக வைத்து எழுதப்பட்ட நாவல். நட்பிற்கு இலக்கணமாக கூறப்படும் கர்ணனின் பெயரைக்கேட்டதும், சிவாஜி கணேசன், கண்களை மூடிக்கொண்டு அம்மா, அம்மா என்று அழுது புலம்புவதும், சிவாஜி மீசையை முறுக்கிக்கொண்டு கர்ஜிப்பதோ அல்லது சிவப்பு விளக்கு மேனியில் பட்டு ஜொலிக்க வேதனையை காட்டுவதோ நினைவில் வந்தால் நீங்கள் கண்டிப்பாக பாரதத்தையும், வெய்யோனையும் படிக்க வேண்டும். காரணம் இரண்டிற்குமான வித்தியாசம். வயதிலிருந்து காட்சிகள் வரை. கர்ணன் ஒரு நல்ல திரைப்படம்தான் (நமக்கேன் வம்பு). 

வெண்முரசு வரிசையில் வெண்முகில் நகரத்திற்கு பின்னால் வந்த இரண்டு நாவல்களும் பாரதத்தின் மைய கதையை விட்டு வெகுதூரம் தள்ளிப் போய்விட்டது. தனி நாவலாக சரிதான். ஆனால் வெண்முரசின் வரிசையில் வைத்து பார்த்தால் ஒரு பெரிய இடைவெளி. இந்நாவல் அந்த இடைவெளியை இன்னும் கொஞ்சம் பெரிதாக்கியுள்ளது.  

26 செப்டம்பர் 2016

டணாயக்கன் கோட்டை - பாலகிருஷ்ண நாயுடு

பல சரித்திரக்கதைகளை படிக்கும் போது எப்போதும் தோன்றும் ஒரு எண்ணம்  " இத்தனை கோட்டைகள், சுரங்கங்கள் எல்லாம் எங்கே போயின". பள்ளியில் படிக்கும் போது படித்த இத்தகைய பல கதைகளின் விளைவால், எங்கள் கோவில் சுவர்களை எல்லாம் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தேன்.  கடைசியில் சுவரிடுக்கிலிருந்த பல்லியை கண்டதே மிச்சம். கோவிலுக்கு அருகிலிருந்த ஓரிடத்தில் ஒரு இயற்கை பள்ளம் திடீரென தோன்றியது. ஒரு ஆய்வு குடுவை போல, ஏதோ ரகசிய குகை என்ற ஆர்வத்தில் உள்ளிறங்கி வெளியே வர மற்றவர்கள் உதவ வேண்டியிருந்தது.  அவ்வளவு ஆர்வம் (அ) ஆர்வக்கோளாறு.

சரித்திரத்தில் இடம் பெற்ற பகுதிகளை பார்க்க ஆர்வம் வந்ததற்கு காரணமே இப்புத்தகங்கள்தான்.  பெங்களூர் அருகிலிருக்கும் நந்தி மலையும் சரித்திர புகழ் பெற்ற இடம் என்று அங்கு சென்ற பின்னர் தெரிந்தது. அங்கிருக்கும் குட்டி குட்டி மதில் சுவர்களை கண்டு ஒன்றும் பெரிதாக தோன்றவில்லை. ஆனால் ஸ்ரீரங்கப்பட்டினம் சென்று வந்த பின்னரே தெரிந்தது அது ஒரு சரித்திரப் புகழ் பெற்ற ஒரு இடம் என்று. நான் அதை ஒரு கோவில் என்ற அளவில் மட்டுமே அறிந்திருந்தேன். முன்னமே தெரிந்திருந்தால் இன்னும் சற்று நேரம் செலவழித்து முழுவதும் பார்த்திருக்கலாம். அந்த ஸ்ரீரங்கப்பட்டினத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட கதை டணாயக்கன்  கோட்டை.

டணாயக்கன்  கோட்டை பாலகிருஷ்ண நாயுடுவால் எழுதப்பட்டது. 1956ல் நவ இந்தியா பத்திரிக்கையில் தொடர்கதையாக வெளிவந்த நாவல். 1959ல் கன்னடத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு கரம்வீர் பத்திரிக்கையில் வெளிவந்துள்ளது. மலையாளத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 

டணாயக்கன்  கோட்டை இன்று பவானி சாகர் அணைக்கட்டின் நீர்பிடிப்பு பகுதியில் இருந்த ஒரு அரண்மனை. இன்றும் அக்கோட்டையிலிருக்கும் கோவில், அணையின் நீர்மட்டம் குறையும் போது வெளிப்படுகின்றது. 

ஸ்ரீரங்கப்பட்டினக் கதைக்கு எதற்கு டணாயக்கன்  கோட்டை என்ற பெயர் என்ற கேள்வி சரிதான். கோட்டை வரிசைக் கதையில் வருவதாக இருந்திருக்கும். மற்றபடி டணாயக்கன்  கோட்டை வருவதே கொஞ்ச நேரம் மட்டுமே. கதை பெரும்பாலும் நடப்பது இன்றைய கர்நாடகாவில். திப்பு சுல்தான் காலத்தில் அவனது ராஜ்ஜியம் திண்டுக்கல் வரை பரவியிருந்ததாக கூறப்படுகின்றது. எங்கள் கோவிலில் ஒரு அழகான பெருமாள் சிலை உண்டு. அது நடுவில் திருடப்பட்டு, எங்கோ தோப்பில் கிடந்து கிடைத்தது. அவ்வளவு அழகான விக்கிரகம். அது திப்பு சுல்தான் காலத்தது என்பார்கள், அவனே தந்தது என்று சிலர் சொல்ல கேள்வி. திண்டுக்கல்லையும் தாண்டி பரவியிருந்திருக்கின்றது அவனது ராஜ்ஜியம்.

07 செப்டம்பர் 2016

ஸ்க்ரூ

சும்மா ஒரு மாறுதலுக்கு - பழைய குப்பைகளை கிளறியபோது கிடைத்த கதை(???)

ஒரு சின்ன ஸ்க்ரூ அவன் வாழ்க்கையை மாற்றும் அளவிற் பிரச்சினை தரும் என்று அவனுக்கு தெரிந்திருந்தால் அவன் அந்த பழைய இத்துப் போன ட்ரான்ஸ்ஸிஸ்டரை கழற்றியிருக்க மாட்டான். டெக்னிக்கல் ஆர்க்கிடெக்ட்டாக (தமிழில் என்ன?) பணி புரியும் அவன், அவ்வப்போது தான் படித்தது எலெக்ட்ரானிக்ஸ் என்பதை தனக்கும்,  மனைவிக்கும் நினைவுபடுத்த செய்யும் வேலை. அது கொஞ்சம் பழைய ட்ரான்ஸிஸ்டர், மொட்டைமாடியில் வைத்துக் கொண்டு இளையராஜா பாட்டு கேட்க வேண்டும் என்று ஆசை.

"ஏங்க காபி வேணுமா" என்று கேட்டபடி அவன் மனைவி குழந்தையுடன் வந்தாள்.

"கொண்டு வா" என்றான்.

"இந்தாங்க இவன கொஞ்சம் பாத்துக்கங்க" என்று குழந்தையை விட்டு விட்டு உள்ளே சென்றாள்.

"வேலையா இருக்கேன் இல்ல இவன இங்க விட்டுட்டு போற. டேய் ஒன்னையும் தொடக்கூடாது , தொட்ட அடி"

பையன் அதை எல்லாம் கண்டு கொள்ளாது, ஒன்றொன்றாக கலைத்து விளையாட ஆரம்பித்தான்.

"இனி இவன வச்சிட்டு ஒரு வேலையும் செய்ய முடியாது" என்று முனங்கி விட்டு, அனைத்தையும் திரும்ப அசெம்பிள் செய்ய ஆரம்பித்தான்.

தொலைபேசி மணி அடித்தது.

"என்னடா சொல்லு" "வரலியா?" "இதுக்கு எல்லாமா பொண்டாட்டிகிட்ட கேக்கனும். அவங்களுக்கு என்னடா தெரியும்" "என்ன எழவோ பண்ணு, கன்ஃபார்ம் பண்ணிட்டு கூப்டு"

பேசிவிட்டு திரும்பி பார்த்தான். குழந்தை அருகில் இல்லை, டீவியை அருகில் ஜாலியாக தரையை ஈரமாக்கிக் கொண்டிருந்தான்.

டிரான்ஸிஸ்டர் கவரை மாட்டிவிட்டு, ஒவ்வொரு ஸ்க்ரூவாக மாட்ட ஆரம்பித்தான்.  ஒரு ஸ்க்ரூவை காணவில்லை. தரை, சோபா, என அனைத்து இடத்தையும் தேடிப் பார்த்தான், கிடைக்கவில்லை.

"என்னத்த தேடிட்டு இருக்கீங்க" என்றபடி அவன் மனைவி வந்தாள்

"ஒரு ஸ்க்ரூவ காணோம், அத மாட்டிட்டா வேலை முடிஞ்சிடும், எங்கயோ விழுந்துடிச்சி போல, விளக்குமாற எடுத்துட்டு வா?"

"பையன் பக்கத்துல இருந்தானா?"

"ஆமா"

பையன் மெதுவாக நகர்ந்து பால்கனி பக்கம் போயிருந்தான். அங்கிருந்த க்ரில் நடுவில் இரண்டு காலையும் வெளியில் தொங்கப்போட்டுக் கொண்டு யாரையோ பார்த்து சிரித்து கொண்டிருந்தான்.

"கண்ணு, அப்பாகிட்டருந்து ஏதாவது எடுத்துட்டு வந்தியா"

மெதுவாக கையை விரித்து காட்ட ஒரு குட்டி ஸ்க்ரூ.

"இவன் கிட்ட இருக்கு, டேய் கொண்டா அது அப்பாவுக்கு வேணும்"

டக்கென்று கையை பின்னால் வைத்துக் கொண்டு, "ம் ஹூம்" என தலையை ஆட்டிவிட்டு ஓட ஆரம்பித்தான். விரட்டி சென்று பிடித்தவுடன், ஸ்க்ருவை டபக்கென்று வாயில் போட்டுவிட்டான்.

"டேய், டேய் துப்பு துப்பு" என்று வாயில் விரலை விட்டு துழாவினாள், இல்லை.

கண்கள் மாறியது, வாந்தி வருவது போல குமட்டினான். ம்ஹூம். வாயை திறந்து திறந்து மூடி, கண்கள் சொருகியது. மயங்கி விழுந்தான்.

அவள் பையனை மடியில் குப்புற போட்டு முதுகில் தட்டினாள், லேசாக இருமினானே ஒழிய, ஸ்க்ரு வரவில்லை.

பிரமை பிடித்தது போல பார்த்துக் கொண்டிருந்த அவன் ஓ வென்று அழுக ஆரம்பித்தான்.

"ஏங்க, போய் ஆட்டோ கூட்டிட்டு வாங்க. ஆஸ்பத்திரிக்கு போலாம்"

அவள் கூறியது எதுவும் அவன் காதில் விழவில்லை. பையனை மடியில் போட்டுக் கொண்டு ஏதோ புலம்பிக் கொண்டிருந்தான். அவனை உலுக்கி உலுக்கி பார்த்துவிட்டு, ஒன்றும் செய்வதற்கில்லை என்று ஆட்டோ பிடிக்க வெளியே ஓடினாள்.

அவன் பிரமை பிடித்தவன் போல குழந்தையை வைத்துக் கொண்டிருந்தான். அவள் குழந்தையை எடுத்துக் கொண்டு, அவனையும் ஒரு கையால் இழுத்துக் கொண்டு ஓடினாள். இருவரையும் டாக்டரிடம் காட்ட வேண்டும் என்று அவளுக்கு தோன்றியது.

ஆட்டோ ஓடிய வேகத்திற்கும், குலுக்கலுக்கும் கூட ஸ்க்ரூ வெளியே வரவில்லை.

குழந்தை மூச்சு விடுவதே தெரியவில்லை. உடலின் நிறமும் மாற தொடங்கியது. நீலமாக போவது போல அவளுக்கு தெரிந்தது.

விடாமல் அவனை தட்டி தட்டி எழுப்பிக் கொண்டே வந்தாள். அவன் தன் புலம்பலை விடாமல் தொடர்ந்து கொண்டே இருந்தான். "யோவ் சும்மா இருய்யா, அந்தம்மாவே தைரியமா வருது, ஞை ஞை ன்னுட்டு"

மருத்துவமனையில், மருத்துவர்

"ஆணி உள்ளே போகவில்லை, மூச்சுக் குழலுக்கும், உணவு குழலுக்கும் நடுவில் மாட்டிக் கொண்டது போல உள்ளது. ரொம்ப நேரம் இருந்தால் உயிருக்கு ஆபத்து. உடனே ஸ்கேனும் எக்ஸ்ரேயும் எடுக்க வேண்டும். அதன் பின் எப்படி எடுப்பது என்று முடிவு செய்ய வேண்டும்" என்று ஆங்கிலத்தில் கூறிவிட்டு சென்றார்.

ஸ்கேன் எடுக்கும் இடத்தில் பயங்கர கூட்டம்.

பையனை மடியில் வைத்துக் கொண்டு தளர்ந்து ஒரு சேரில் விழுந்தான். இந்த உலகத்தில் இருப்பவன் போலவே இல்லை. பிரமை முற்றிய பைத்தியக்காரன் போல இருந்தான். "முதல்ல அவன என்கிட்ட கொடுங்க, போய் எமெர்ஜென்சின்னு சொல்லி சீக்கிரம் ஸ்கேன் எடுக்க சொல்லுங்க" என்று கூறியப குழந்தையை இழுத்தாள். அவன் தராமல் இன்னும் இறுக்கிக்  கொண்டு ஏதோ புலம்ப ஆரம்பித்தா. இவள் இழுக்க, இழுக்க அவன் குழந்தையின் வயிற்றை பலமாக அழுத்தி பிடித்து தன்னிடம் வைத்துக் கொண்டான். அழுத்திய வேகத்தில் குழந்தை பலமாக இருமியது. டொ

ஸ்க்ரு வெளிய வந்து விழுந்தது.

அடுத்த வாரம் முதல் அவள் மீண்டும் வேலை தேட ஆரம்பித்தாள்.